Wednesday, April 2, 2014

8. இயலாமை

சாலையில் இருக்கும் குழியின் மீது வாகனம் இறங்கும்போதும்;
பிளாஸ்டிக் கூடாரங்களுக்குள் வசிக்கும் சாலை ஓர கடைசி மனிதனை பார்க்கும்போதும்;

பெற்ற குழந்தையை பள்ளிக்கு அனுப்ப வசதியின்றி தவிக்கும் தந்தையின் அழுகையை கேட்கும்போதும்;
கல்வி என்ற பெயரில் பல லட்சங்களை செலவு செய்த பிறகும், வாழ்வில் செய்வதரியாது தவிக்கும் இளைஞர்களுடன் உரையாடும்போதும்;

நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றேன்.
எதுவும் செய்ய முடியவில்லை. அருகதை இல்லை. துணிவு இல்லை. முயற்சி இல்லை.

சரி..வரும் தேர்தலில் வாக்காவது அளிப்போம் என்று மதுரைக்கு ரயில் முன்பதவி செய்திருக்கின்றேன்.

Saturday, November 16, 2013

7. பணம்

எப்படி சம்பாதிப்பது என்ற முடிவை நாம் எடுக்கின்றோம். எப்படி செலவழிப்பது என்ற முடிவை அடுத்தவரை பார்த்து எடுக்கின்றோம். பணம், பேராசையை தேவையாக்கும் கருவி.




படம்: www.devianteles.deviantart.com/art/Greed-is-stopping-human-evolut-252546322

Wednesday, October 16, 2013

6. உண்மை

காந்தி என்றார்கள், காமராஜர் என்றார்கள், அண்ணா என்றார்கள்.

பின்பு எம்.ஜி.ஆர் என்றார்கள், கலைஞர் என்றார்கள், அம்மா என்றார்கள். 

இன்று மோடி என்கிறார்கள்.

யார் வேண்டுமானாலும் வாங்க போங்க. எனக்கு மட்டும் ஒரே இடம், ஒரே தொழில், ஒரே வேலை சோறு.

Saturday, January 5, 2013

5. கல்வி

கற்பது என்னவென்றோ, கற்பது எதற்காக என்றோ தெரியாமலே சென்று கொண்டு இருக்கின்றோம். உண்மை கல்வியை கொன்று கொண்டு இருக்கின்றோம்.

கற்பது என்ன?
புத்தகங்களையோ  அல்லது அதில் உள்ள பக்கங்களையோ   அல்லது அதில் உள்ள எழுத்துக்களையோ அல்ல. அதில் உள்ள அர்த்தங்களை.

கற்பது எதற்க்காக? 
கற்ற  அர்த்தங்கள் நாம் வாழும் சமுதாயத்திற்கு எப்படி பயன்படும் என்பதை யோசிப்பதற்கு. யோசித்ததை செய்வதற்கு. பணம் சம்பாதித்து பிணம் ஆவதற்கு அல்ல.

Tuesday, December 11, 2012

4. விபத்து

பிறந்துவிட்டோம், இனி இறப்பது உறுதி. இறப்பது எப்போது என்பது மட்டும் முக்கியமல்ல , எப்படி என்பதும் முக்கியம்.

பேருந்தின் படியில் தொங்கும் பொழுது, டிராபிக் சிக்னலில் தாவும் பொழுது, மது அருந்தி தன்னை தானே மறக்கும் பொழுது, புகை புடித்து புத்தி இழக்கும் பொழுது, நோய்க்கான வைத்தியம் சரிவர பார்க்காத பொழுது...

தன்னை தானே கொன்று கொள்ள தினமும் துணிகிறோம். இதில் அரசுக்கும் பங்கு உள்ளது என்று கூறுவது எவ்வளவு உண்மையோ தெரியவில்லை.

3. பசி

மண் பானையில் இருந்து  இறக்கி தோல் பானையில் போட வேண்டும். அதுவே உணவு என்று எனக்கு தெரிந்த பாட்டி ஒருவர் கூறினார்.

இன்று மண் பானை உடைந்து தோல் பானை சுருங்கி வாழும் இந்தியர்கள்  நிலைமை நெஞ்சுருக வைக்கிறது. 

நடை பாதையில் குடியேறி,  பிடி அரிசியில் சோறு சமைத்து, மழைக்கு ஒதுங்க ஓடு இன்றி, தினம் செத்துப்பிழைக்கும் வறுமை கோட்டுக்குக்கீழ் அகல பாதாளத்தில் இருக்கும் கடைசி இந்தியனின் இன்றைய நிலைமை; தனி மனித இயலாமையா அல்லது சமூகத்தின் இயலாமையா?

2. மின்சாரம்


"வீட்டில் இருக்கும் வரை இரு மாதங்களுக்கு ஒருமுறை பணம் கட்ட வேண்டிய நஷ்ட கணக்கில் இருந்தாய்.


இன்று நீன் என் வீட்டிற்கு வருவதே இல்லை, உன் வரவை தேடி நான் மட்டும் அல்ல, வாங்கி வைத்த இன்வெர்ட்டர்  மற்றும் பாட்டரி கூட காத்து இருக்கிறது."


எல்லாம் வேண்டும் என்று சொல்வதற்கு நாம் மிகவும் வளர்ந்த தேசம் அல்ல. ஆனால் அவசியம் வேண்டும் என்ற பட்டியலில் மின்சாரமும் ஒன்று. அரசே..தாங்கள் ஏன் இதை திட்டமிட மறந்தீர்கள்?